இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Sunday, August 13, 2017

ஆறுமுகன் அவதாரம்

‘சான்றோர்களே கேளுங்கள்! மலையிலிருந்து வெண்மேகமும் நீரோடைகளும் கற்பாறைகளும் எரிமலைக்குழம்பும் பிறக்கின்றன. அழிவற்றவரான காசியப பிரஜாபதியின் கனிவும் கடுமையும் முனிவும் சோர்வும் கொண்ட கணங்கள் எழுந்து மைந்தர்களாயின. அவர் உளம் கடுத்த கணத்தில் உருவான வஜ்ராங்கன் என்னும் மைந்தன் இறுகிய உடலும் அதனுள் இறுகியமனமும் கொண்டவனாக இருந்தான். தன் அகமும்புறமும் இறுகியிருப்பதைக் கண்டு அவன் வெட்கினான். தன்னை நெகிழ்த்து நீராக்கி மேகமாக்கி வானாக விரிய அவன் விழைந்தான்.
பிரம்மனை எண்ணி தவம்செய்ய முற்பட்ட வஜ்ராங்கன் வராங்கி என்னும் பெண்ணை மணந்தான். கடம்பவனத்துக்குள் ஒரு மரத்தடியில் அமர்ந்த அவன் தன் முன் சிற்றகல் ஒன்றை ஏற்றி வைத்தான். அச்சுடரை அணையாமல் பார்த்துக்கொள்ளும்படி வராங்கியிடம் சொல்லிவிட்டு ஊழ்கத்திலாழ்ந்தான். முதலில் கண்ணிலும் பின் கண்ணகத்திலும் அதன்பின் அகத்திலும் அதன்பின் அகத்தகத்திலும் அச்சுடரை நிறுத்தி தன்னை விலக்கி தானதுவாக ஆனான். அவன் அகம் தழலென நெகிழ்ந்து நெகிழ்ந்து சென்றது.


தவம் முதிர்ந்தபோது அந்த அகல்சுடர் மேலும் ஒளிகொண்டது. அந்த வெண்ணொளி வளர்ந்து ஒரு வானளாவிய மரமாக ஆனது. அந்தமரத்தின் கிளைகளில் தழலிலைகள் துளிர்த்தன. தழல்மலர்கள் இதழிட்டன. அச்சுடரின் ஒளியில் பிரம்மன் தோன்றும் கணம் மென்மழை ஒன்று பெய்து சுடர் அணைந்தது. சினந்து கண்விழித்த வஜ்ராங்கன் வராங்கியைத் தேடினான். அவள் ஒரு மரத்தடியில் நின்று கண்ணீர்விடுவதைக் கண்டான்.
“என் விழிநீரே அச்சுடரை அணைத்தது” என்றாள் வராங்கி. வஜ்ராங்கன் தவம் செய்துகொண்டிருந்தபோது இந்திரன் வந்து அவள் கற்பை கவர்ந்ததைப்பற்றிச் சொன்னாள். யானையாக வந்து அவளை அச்சுறுத்தினான். பாம்பாக வந்து அவளைத் தீண்டினான். அவள் மயங்கியபோது மன்மதனாக வந்து அவளைப் புணர்ந்தான். “உங்கள் தவம் பொய்க்க என் நிறையை அவன் வென்றான்” என்றாள் வராங்கி.
கடும்சினம்கொண்ட வஜ்ராங்கன் தன் முன் ஒரு கற்பாறையை நட்டு அதை தன் கண்ணிலும் கண்ணுள்ளிலும் உள்ளிலும் உள்ளுள்ளும் நிறைத்து மீண்டும் தவத்திலாழ்ந்தான். அவன் அகம் இறுகி இறுகி எடைமுதிர்ந்தபோது அந்தப்பாறை ஒரு கரிய வைரமாகியது. அதன் ஆடிப்பரப்பில் பிரம்மன் தோன்றினான். “என் தவத்தை அவமதித்த தேவர்களைக் கருவறுக்கும் மைந்தன் ஒருவன் எனக்குத்தேவை” என்றான் வஜ்ராங்கன். “என் தவத்தின் மேல் ஆணை. இதை தேவபிதாவான நீங்களும் கேட்டாகவேண்டும்” என்றான். சான்றோரே தவத்தின் விளைவுக்கு தெய்வங்கள் அடிமை. தன் மைந்தரை அழிக்கும் வரத்தை அளித்து பிரம்மன் கண்ணீருடன் மீண்டான்.
வராங்கி வயிறுகனத்து ஈன்றமகவின் உடல் நூறுகோடி யுகங்கள் விண்நெருப்பில் வெந்து திசையாமைகளின் எடையில் அழுந்தி உருவான கரியவைரத்தால் ஆனதாக இருந்தது. அவன் கற்பாறைகளை தன் கைகளால் சந்தனக்குழம்பென அள்ளி எடுக்கக்கூடியவனாக இருந்தான். ஆயிரம் மடங்கு எடையுடன் அவன் விண்வெளியில் சுழன்று ஒரு வான்மீனானான். ஆகவே அவன் தாரகாசுரன் என்று அழைக்கப்பட்டான்.


தாரகன் ஐந்துநெருப்புகளை வளர்த்து அதன்நடுவே நின்று பிரம்மனை நோக்கி தவம்செய்தான். பாறைகள் உருகியோடும் வெம்மை அவனை அழிக்கவில்லை. வெம்மை அவன் அகத்தை மேலும் மேலும் இறுக்கியது. அவ்வெம்மையின் உச்சத்தில் பிரம்மன் தோன்றினான். “இறப்பின்மை வேண்டும் எனக்கு” என்றான் தாரகன். “அவ்விதியை அளிக்க மும்மூர்த்திகளுக்கும் உரிமை இல்லை” என்றான் பிரம்மன். “அப்படியென்றால் என் இறப்பு ஏழுவயதான குழந்தையின் கையால் மட்டுமே நிகழவேண்டும்” என்றான் தாரகன். அவ்வரமளித்து பிரம்மன் புன்னகையுடன் சென்றான்.
சாகாவரம் பெற்றவன் என்று எண்ணிய தாரகன் மண்ணை அடக்கினான். பின் ஏழு விண்ணகங்களையும் வென்றான். தேவர்களை தன் ஏவலராக்கினான். இந்திரனை தன் தேர்க்காலில் கட்டி இழுத்து கொண்டுசென்று தன் மாளிகைப்பந்தல்காலில் கட்டிப்போட்டான். பிழையுணர்ந்து கண்ணீர் விட்ட தேவர்கள்  தாரகனை வெல்லும் வழி தேடினர். முக்கண் முதல்வனே காக்கமுடியுமென்று தெளிந்தனர்.
அவர்களின் கண்ணீரைக் கண்டு முக்கண்ணன் கனிந்தான். அவனுடைய படைப்புசக்தி கங்கையில் ஓர் வெண்ணிற ஒளியாக விழுந்தது. கங்கை அதை சரவணப்பொய்கையில் ஒரு தாமரை மலரில் அழகிய சிறு மகவாக பிறப்பித்தது. சரவணப்பொய்கையில் நீராடவந்த கார்த்திகைப்பெண்கள் அறுவர் அக்குழந்தையைக் கண்டனர். அறுவரும் அதற்கு அன்னையராக விரும்பி அதை ஆறுதிசையிலிருந்தும் அள்ளத்துணிந்தனர். அவர்களின் அன்பைக்கண்டு அக்குழந்தை ஆறுமுகம் கொண்டு புன்னகைசெய்தது. ஆறுமுகனாகிய கார்த்திகேயனை வணங்குக! அவன் கருணையால் வாழ்கின்றன மண்ணும் விண்ணும்.
ஏழு பெருங்கடல்களின் நீரால் திருமுழுக்காட்டி ஏழுவயதான குமரனை தேவர்களுக்கு சேனாபதியாக அமர்த்தினர் முதல்மூவரும். கண்டாகர்ணன், லோகிதாக்‌ஷன், நந்திஷேணன், குமுதமாலி என்னும் நான்கு படைத்துணைவர்களைத் தன் மைந்தனுக்களித்தார் முக்கண்ணன். பிரம்மன் ஸ்தாணு என்னும் படைச்சேவகனை அளித்தார். விஷ்ணு ஸம்க்ரமன், விக்ரமன், பராக்ரமன் என்னும் மூன்று கொடித்துணைவர்களை அளித்தார். வல்லமை வாய்ந்த விண்ணக நாகங்கள் ஜயன், பராஜயன் என்னும் இரு தேர்த்துணைவர்களை அளித்தன.
ஊழித்தீயின் வெம்மை எரியும் வைரமேனி கொண்ட தாரகனை வெல்ல தேவர்களால் இயலாது, அன்னையரின் படையாலேயே இயலுமென்றனர் விண்ணோர்குலத்து நிமித்திகர்கள். ஏழுவயதான கந்தன் சென்று தன் மெல்லிய விரல்களால் தொட்டதும் மண்ணிலுள்ள புனிதநீர்க்குளங்களெல்லாம் கனிந்து அன்னையராக மாறி எழுந்தன. சோமதீர்த்தம் வசுதாமை என்னும் அன்னையாகியது. பிரபாச தீர்த்தம் நந்தினி என்னும் தாயாகியது. இந்திர தீர்த்தம் விசோகையையும் உதபான தீர்த்தம் கனஸ்வானையையும் அளித்தன.
சப்தசாரஸ்வதம் கீதப்பிரியை, மாதவி, தீர்த்தநேமி, ஸ்மிதானனை என்னும் மாதாக்களாகியது. நாததீர்த்தம் ஏகசூடையையும், திரிவிஷ்டபம் பத்ரகாளியையும், த்விருபாவனம் மகிமோபலியையும், மானசதீர்த்தம் சாலிகையையும் பிறப்பித்தன. பதரிதீர்த்தம் சதகண்டையையும், சதானந்தையையும், பத்மாவதியையும், மாதவியையும் பிறப்பித்தது. மண்ணிலுள்ள அனைத்து குளிர்நிலைகளும் அன்னையராகி எழ அவர்களின் தண்மொழிகளாலும் மழைவிழிகளாலும் விண்ணகமே குளிர்ந்து மெய்சிலிர்த்தது. அவர்களின் படை விண்ணில் ஒரு நீலப்பேராறாகப் பாய்ந்தது.
சான்றோரே, அன்று மண்ணில் குளிர்ந்த விழியென கருணைகொண்டு விண்ணைநோக்கியிருந்த ஸித்ததீர்த்தம் என்னும் நீலக்குளம் ஸித்தி என்னும் அன்னையாகி தன் நீலக்குளிரலைகளை ஆடையாக்கி தன்னுள் விழுந்த மின்னலை புன்னகையாக்கி அலைநாதத்தை நூபுரத்தொனியாக்கி கார்த்திகேயனை அடைந்தாள். அவன் பின்னால் அணிவகுத்த அன்னையரின் பெரும்படையில் தானும் இணைந்துகொண்டாள்.
கருடன் தன் மைந்தனான மயிலை சுப்ரமணியனுக்கு அளித்தான். அருணன் தன் மகவாகிய பொற்சேவலை அளித்தான். அக்னி ஒளிவிடும் வடிவேலை அளித்தான். அத்ரி சிறுமைந்தனுக்கு செம்பட்டாடை அளித்தார். பிரகஸ்பதி யோகதண்டமும் கமண்டலமும் அளித்தார். விஷ்ணுவின் மணிமாலையும் சிவனின் பதக்கமும் இந்திரனின் முத்தாரமும் அவனை அணிசெய்தன.
தாரகாசுரன் தன் படைத்துணைவனான மகிஷனுடன் போருக்கெழுந்தான். மாபலி பெற்ற மைந்தனான பாணாசுரன் அவனுக்கு ரதமோட்டினான். தாரகாசுரனின் மைந்தர்களான தாரகாக்‌ஷன், கமலாக்‌ஷன், வித்யுமாலி ஆகியோரும் பெருவலிகொண்டவர்களான அண்டகாசுரன் ஹ்ருதோதரன் திரிபாதன் ஆகியோரும் அவனுக்காக படைநடத்தினர். ஏழு மன்வந்தரங்கள் அகாலப்பெருவெளியில் நடந்தது அந்தப்பெரும்போர்.
தாரகனின் எல்லையற்ற பெருவெம்மையை அன்னையரின் குளிர் அணைத்தது. அவனுடைய வைரநெஞ்சம் அவர்களின் கருணைகண்டு இளகியது. வல்லமை இழந்து அடர்களத்தில் நின்ற அவனை பன்னிருகைகளிலும் படைக்கலம் கொண்டு வந்த பேரழகுக்குழந்தை எதிர்கொண்டது. அதன் அழகில் மயங்கி மெய்மறந்த விழிகளுடன் நின்ற அவனை அக்குழந்தை வென்றது. தன் காலடியில் ஒரு கருநாகமாக என்றுமிருக்க அருள்செய்தது. தேவசேனாதிபதியின் ஒளிர்கழல்களை நெஞ்சிலணிக! அவன் பெயரை நாவிலணிக! அவன் அழியாப்பெருங்கருணையை சிந்தையில் அணிக!
போர் முடிந்ததும் ஒவ்வொரு அன்னையையும் பேரெழில்குமரன் கட்டித்தழுவி முத்தமிட்டனுப்பினான். ஸித்தி அவனுடைய ஆறு செங்கனிவாய் முத்தங்களைப் பெற்று மண்ணுக்கு மீண்டாள். பிற அன்னையரைப்போல அவள் அகம் அடங்கவில்லை. மீண்டும் அந்த முத்தங்களைப்பெற அவள் விழைந்தாள். அவள் திரும்பிப்பார்த்தபோது அறுமுகத்து அண்ணலிருந்த இடத்தில் இருப்பும் இன்மையும் அற்ற பெரும்பாழே திகழக்கண்டாள்.
அவளுடைய விருப்பு அவளை மீண்டும் பிறக்கச்செய்தது. ஏழு பிறவிகளில் ஆறு மைந்தர்களுடன் அவள் மண்ணில் பிறந்துகொண்டே இருக்கிறாள். ஆறுமுகம் கொண்ட மைந்தர்களால் அணிசெய்யப்பட்டவள் ஸித்தி. ஆறுமுறை விண்ணால் அருள்புரியப்படுபவள். ஆறுமுறை மண்ணால் வாழ்த்தப்படுபவள். அவள் வாழ்க!’

நன்றி ஜெயமோகன். 

No comments:

Post a Comment